இன்னும் வீறுகொண்டெழும்

Siraj Mashoor

21ம.நே  · 

அரகல பூமிய’ (Aragala Bhoomiya)

மக்கள் போராட்டக் களத்திற்குள் (அரகல பூமிய) நுழைந்ததும், “அபி பbயய்த?” என்று ஒலிபெருக்கியிலிருந்து ஒரு குரல் கேட்கிறது. “நே…நே…” என்று சுற்றியிருப்போர் உரத்துச் சொல்கின்றனர்.(“நமக்குப் பயமா?” “இல்லை இல்லை…”)

ஜனாதிபதி செயலகத்தைச் சூழவும், காலிமுகத் திடலிலும் அமைக்கப்பட்டிருக்கும் மக்கள் போராட்டக் களம், முக்கியமானதொரு அரசியல் எதிர்ப்புணர்வு வடிவம். அதை ராஜபக்ஷ கம்பனி குறைத்து மதிப்பிட்டு விட்டது என்பதுதான் அவர்களது வரலாற்றுத் தவறு.

அங்கிருப்போருள் பெருந்தொகையானோர் இளைய தலைமுறையினர். தங்களது எதிர்காலம் சூறையாடப்பட்டு விட்டது என்ற தார்மீகக் கோபம்தான் அவர்களைத் தூண்டி விட்டது. அடங்க மறுக்கும் கலகக் குரல் அது.

சிலர் இதன் அரசியல் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட்டனர். ஆனாலும், படிப்படியாக நாட்டு மக்களது ஒட்டுமொத்த எதிர்ப்பின் திரட்சியாக இது வளர்ந்து வந்தது. ஊடகங்களினதும் சர்வதேச சமூகத்தினதும் அதிக கவனயீர்ப்பை இது பெறத் தொடங்கியது.

நாட்டு மக்களது உள்ளமும் உணர்வும் சங்கமிக்கும் இடமாக இது மாறிவிட்டது. இந்தப் போராட்டக் களத்தில் பல்வேறு வகையான முன்னெடுப்புகள் முகிழ்க்கத் தொடங்கின.

இலங்கையரின் பன்மைத்துவத்தை உணரும் வகையிலான காட்சிகளை, இங்கு தரிசிக்கக் கிடைத்தது. இந்தக் களத்தில் இடதுசாரிகள் மட்டுமே இருப்பது போல சிலர் சித்தரிக்க முற்பட்டனர். ஆனால், யதார்த்தம் அதை விட மாறுபட்டது. அங்கு பெரியோர், சிறியோர், வலதுசாரிகள், இடதுசாரிகள், ஆண்கள், பெண்கள், லிபரல்வாதிகள், தொழிற்சங்கத்தினர், வியாபாரிகள், சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், மலையகத் தமிழர், பல்வேறு அரசியல் கட்சி சார்பானவர்கள், பல்வேறு சமயத்தவர்கள், மதகுருக்கள், தனியார் துறையினர், சமூக ஊடக பிரபலங்கள், கலைஞர்கள் என்று பலதரப்பட்டவர் இருந்தனர். இன்னும் பலர் வந்து போயினர்.

அங்கு அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களும் இடதுசாரி இளைஞர்களும் பலமிக்கவர்களாக இருந்தனர் என்பது உண்மைதான்.

அவர்கள் இல்லாமல் போயிருந்தால், போராட்ட பூமியின் உறுதிப்பாட்டை- நிலைபேறான தன்மையை- தொடர்ச்சியைப் பேணுவது கடினமாக இருந்திருக்கும். அர்ப்பணிப்பு மிக்க இவர்களது பங்களிப்பைக் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது.

இப்படியான மக்கள் போராட்டத்தில், போராட்ட உணர்வைத் தொடர்ச்சியாக தக்கவைப்பது எவ்வளவு கடினம் என்பதை, அனுபவ ரீதியாக உணர்ந்தவன் என்ற வகையிலேயே இதை வலியுறுத்தி – அடிக்கோடிட்டுச் சொல்கிறேன்.

மக்களைத் தொடர்ந்தும் ஈர்க்கும் வகையிலான பல்வேறு உத்திகளை, இதன் ஏற்பாட்டாளர்கள் முறையாகச் செய்து வந்தனர். பல்வேறு புத்தாக்க முயற்சிகள் அடிக்கடி முன்னெடுக்கப்பட்டன. மக்களைத் தக்க வைப்பதற்காக ஒருவிதமான ‘கொண்டாட்ட மனநிலை’ பேணப்பட்டது. சிலர் இதை வெறும் கேளிக்கையாக மதிப்பிட்டனர்.

இன்னும் சிலர் இதை சர்வதேச சக்திகளின் கருவியாக நோக்கினர். சிலர் உள்ளூர் அரசியல் கட்சிகளின் பினாமிகள் – ஏஜெண்டுகள் என்றனர். இதில் பகுதியளவு உண்மை இருக்கலாம். ஆனால், மிகைப்படுத்தல்கள் அதிகம்.

பல தரப்பினர் ஒன்று திரளும் தன்னெழுச்சியான போராட்டத்தில் எல்லாத் தரப்பும் இருக்கத்தான் செய்யும்.

ஆனால், அதன் மைய நோக்கிலிருந்து விலகாமல் அதைப் பேணுவதுதான் அடியாதாரமான தேவை. அதை அவர்கள் கவனமாகப் பேணி வந்தனர்.

ஒரு மாத கால இடைவெளிக்குள், இது ஒட்டுமொத்த தேசத்தின் மனச்சாட்சியாக வடிவம் எடுத்து விட்டது. மக்களுக்கு இது விடுதலை உணர்வின் திரட்சியாகத் தெரிந்தது.

மறுதலையாக, அதிகாரத் தரப்புக்கு இது தொல்லையாகவும் தலையிடியாகவும் தெரிந்தது. இதைக் கலைக்கத் தருணம் பார்த்திருந்தனர்.

ஆயினும், மக்கள் போராட்டக் களம் வன்முறையற்றதாக – அமைதி வழியில் விடாப்பிடியாக இருந்தது. அதுவே அதன் வெற்றியின் பிரதான இரகசியம். இது அரசாங்கத்திற்கும் ராஜபக்ஷ குடும்பத்திற்கும் பெரும் சவாலாக இருந்தது. கலைக்கவும் வேண்டும் கலைக்கவும் முடியாது என்ற இரண்டக நிலை.

சர்வதேச சமூகத்தின் பார்வை இந்த மக்கள் போராட்டக் களத்தில் நிலைகுத்தி இருந்தது இன்னொரு முக்கிய அம்சம். மேற்கு நாடுகளிடமும் IMF, உலக வங்கி போன்ற சர்வதேச நிறுவனங்களிடமும் கையேந்த வேண்டிய நிலை இருந்ததால், ஆட்சியாளர்கள் அடக்கி வாசிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தனர்.

வேறு வழியின்றி கைகளைப் பிசைந்து கொண்டு, குழம்பிய மனநிலையில் தடுமாறிக் கொண்டிருந்தனர்.

மறுபுறம், இந்த மக்கள் போராட்டக் களம் நாடளாவிய ரீதியில் வெகுஜனத்திற்கு பெரும் உந்துதலைக் கொடுத்து வந்தது. நாட்டின் பல்வேறு பாகங்களிலும் இதன் தாக்கத்தை- எதிரொலியை உணர முடிந்தது.

மே 06 ஆம் திகதி இடம்பெற்ற நாடு தழுவிய ஹர்த்தாலால் முழு நாடும் ஸ்தம்பித்து நின்றது. இந்த சிவில் ஒத்துழையாமை இயக்கம் வளர்ந்து உறுதிப்பட்டு விட்டால், அரச இயந்திரம் முடங்கிப் போய் விடும் என்பதை ராஜபக்ஷ குடும்பம் நன்கு உணர்ந்திருந்தது.

இதை எப்படியாவது கலைத்து விட வேண்டும்- துடைத்தழிக்க வேண்டும் என்று தருணம் பார்த்திருந்தனர்.

அந்தோ பரிதாபம்!

அவர்கள் தேர்ந்தெடுத்தது மிகப் பழசுபட்டுப் போன பழைய பாணி உத்தியைத்தான். அதுவும் கைக்கூலிகளை அமர்த்தி அரசியல் நாடகம் ஆட முற்பட்டார்கள். இதை அடித்துக் கலைத்து விட்டு, இன்னும் அதிகாரக் கதிரையை நக்கிப் பிழைக்கலாம் என்று கனவு கண்டார்கள்.

அதனால்தான் குளவிக் கூட்டுக்குக் கல்லெறிந்தார்கள். எதில் கை வைக்கக் கூடாதோ அதில் கை வைத்து விட்டார்கள். அது ‘பூமராங்’ ஆக மாறி, ஏவிய அவர்களையே திருப்பித் தாக்கத் தொடங்கியிருக்கிறது.

விளைவு: ஒரே இரவில் நாடே பற்றி எரிந்தது. ராஜபக்ஷ குடும்ப இல்லமான ‘மெதமுலான வளவ்வ’ தீப்பற்றி எரிந்ததும், டீ.ஏ.ராஜபக்ஷ நினைவிடம் சிதைக்கப்பட்டதும் வரலாற்றுக் குறியீடாக மாறியிருக்கிறது.

அதிகாரத்தில் இருப்போர் ஒரே தவறைத்தான் திரும்பத் திரும்ப செய்கிறார்கள். அவர்கள் வரலாற்றிலிருந்து ஒரு பாடத்தையும் கற்றுக் கொள்வதில்லை என்பதுதான் அது. தாமும் குழம்பி மற்றவர்களையும் குழப்புகிறார்கள்.

தொடர்ச்சியான அரசியல் தவறுகளுக்கான பரிசே, ராஜபக்ஷ கும்பலுக்கு இப்போது கிடைத்துக் கொண்டிருக்கிறது.

போராட்ட பூமியை- அதன் அரசியல் உள்ளீட்டை அவர்கள் குறைத்து மதிப்பிட்டார்கள். முற்றிலும் வேறுபட்ட வரலாற்றுச் சூழலுக்குள் பிறந்து வளர்ந்த புதிய தலைமுறையின் மன உணர்வுகளைத் துல்லியமாகக் கணிக்கத் தவறினார்கள்.

இது 21ஆம் நூற்றாண்டின் மூன்றாவது பத்தாண்டு என்பது, 70 வயசையும் தாண்டிய மெதமுலான குடும்பத்திற்கு தாமதமாகவே உறைக்கத் தொடங்கியிருக்கிறது.

55 வருட அரசியல் அனுபவம், கிழட்டு மைனாவுக்கு கைகொடுக்கவில்லை என்ற வரலாற்றுத் துயருக்கு நாமெல்லாம் சாட்சிகளாகி விட்டோம்.

எல்லோருக்கும் எல்லாக் காலமும் ஒரே விதமாய் அமைந்து விடுவதில்லை. போராட்டக் களத்தை வலிந்து அடக்க முற்பட்டால் அது வீறு கொண்டு எழும். வரலாறு திரும்பத் திரும்ப நிறுவிய உண்மை இது. இதற்கு இப்போது நாமெல்லாம் சாட்சிகளாக இருக்கிறோம்.

சிராஜ் மஷ்ஹூர்

10.05.2022

Loading